நாம் தமிழர்கள்…………?
ஒரே மொழிதான்
ஆனாலும்-
நீயும் நானும் பேசிக் கொள்வதில்லை.
ஒரே ஊர்தான்
ஆனால்-
நீயும் நானும் உறவாடிக் கொள்வதில்லை
ஒரே பண்டிகைதான்
ஆனால்-
நீயும் நானும் பண்டம் பகிர்ந்து கொள்வதில்லை
ஒரே மதம்தான்
ஆனால்-
நீயும் நானும் மன்னித்துக் கொள்வதில்லை…
நம் இடையினில் இருப்பது
சாதி தோழா.
நன்றி:விடுதலை வேட்கை- வெற்றி வேந்தன்
அருந்ததியர் இனத்தில் பிறந்தது பாவமா?-பட்டதாரி வாலிபரின் பரிதாப நிலை
சாதி ஒழிக்கப்படும் வரை…………தாழ்த்தப்ப்ட்ட தமிழ்ச் சகோதரர்கள் இப்படித்தான் பாதிக்கப்படுவார்கள்
மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள கிராமம் வடிவேல்கரை. இந்த பஞ்சாயத்துக்குத்தான் மத்திய அரசு சமீபத்தில் ‘நிர்மல் புரஸ்கார்’ விருது வழங்கியிருக்கிறது. அந்த விருது கிடைக்கக் காரணமாக இருந்தவர் அம்மாசி. இவர்தான் அந்த ஊருக்குத் துப்புரவுப் பணியாளர். குப்பைகளை இவர் கூட்டி, பெருக்கியதால் சுத்தமான கிராமம் என்ற பெருமை கிடைத்தது. அதற்கு நிர்மல் புரஸ்கார் விருதும் கிடைத்தது.
வடிவேல்கரையில் பிள்ளைமார், கள்ளர் சமூகத்தினர்தான் அதிகம். அங்கு அருந்ததியர் இன மக்கள் எழுபத்தைந்து குடும்பங்கள்தான் வசிக்கின்றன. அருந்ததியர் மக்களில் யாரும் படிக்காத நிலையில் தப்பித் தவறி துப்புரவுப் பணியாளரான அம்மாசி, தன் மகன் முருகனை லிட்டில் டிரஸ்ட் உதவியோடு எம்.காம். படிக்க வைத்தார். தற்போது தனியார் கல்லூரியில் பி.எட். படித்துக்கொண்டிருக்கும் முருகன்தான் இப்போது இந்தக் கிராமத்தின் ஹாட்டான டாபிக். முருகனை படிக்க விடக் கூடாது என்று ஊரே கூடி, அவரது படிப்புக்கு மூடு விழா காண திட்டமிட்டிருக்கிறது என்று மற்ற சாதி மக்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் அருந்ததியர் இன மக்கள். இந்த நிலையில் முருகன் தாக்குதலுக்கு உள்ளானார் என்ற செய்தியும் கிடைத்தது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தலையில் பதிமூன்று தையல்களோடு தரையில் படுத்திருந்த முருகனை சந்திக்க முடிந்தது. ஆறுதல் கூறிவிட்டு பேசத்தொடங்கினோம். ஈனஸ்வரத்தில் முருகனின் குரல் ஒலிக்கத் தொடங்கியது.
“ஊர்ல எங்க அருந்ததியர் சமூகத்தில் நான் மட்டும்தான் எம்.காம். படித்து முடித்து, பி.எட். படிச்சுக்கிட்டு இருக்கேன். நான் ப்ளஸ் டூ படிக்கும் போதே முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ராமநாதன், ‘உனக்கு வேலை போட்டு தர்றேன் படிப்பை நிறுத்திரு’ன்னு சொன்னாரு. நான் கேட்கலை. காலையில வீடு வீடா நியூஸ் பேப்பர் போடுவேன். அதுக்கப்புறம்தான் காலேஜுக்குப் போவேன். இரவு எங்க பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பேன். இதுதான் மற்ற சாதிக்காரர்களுக்குப் பிடிக்கலை.
நாங்க, எங்க காலனி வீட்டுக்குப் போகணும்னா ஒண்ணு கம்மாய்கரை வழியா வரணும். இல்லாட்டி ஊர் மந்தை வழியா வரணும். இப்ப ரிங்ரோடு போடுறதுனால கண்மாய்க் கரை வழி அடைபட்டுப் போச்சு. ஊர் மந்தை வழியாத்தான் வரணும். அப்படித்தான் நான், ஆகஸ்ட் 13-ம் தேதியன்னிக்கு எங்க வீட்டுக்கு மந்தை வழியா சைக்கிள்ல போனேன். மந்தையில் கூடி நின்ற மற்ற சாதிப் பசங்க என்னை வழிமறிச்சு, ‘உனக்கு எத்தனை தடவை சொல்லுறதுடா. இறங்கி உருட்டிக்கிட்டு போ’னு சொல்லி, தள்ளி விட்டதோட, ‘படிச்சத் திமிறான்னு சொல்லி’ கடக்கால் கட்டுறதுக்குப் பயன்படும் கட்டுக்கல்லை தூக்கி ஆனந்த்ங்கிற பையன் என் தலையில போட்டுட்டான்.
மண்டை உடைஞ்சு ரத்தம் ஆறு மாதிரி ஓடுது. ஊரே நின்னு வேடிக்கை பாத்துச்சு. என்னன்னு கேட்க நாதியில்ல. ரத்தம் வழிஞ்சி ஓடுறதைப் பார்த்து பயந்துபோன ஆனந்த், சிலம்பரசன், லட்சுமணன் மூணு பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனாங்க. நானும் எங்க அப்பாவும் அடிச்சோம்னு சொல்லி அவனுங்களே ரத்த காயத்தை ஏற்படுத்திக்கிட்டு போய் புகார் கொடுத்தாங்க. சம்பவம் நடந்து நான்கு மணி நேரம் கழிச்சுத்தான் எனக்கே சுயநினைவு வந்தது. அதன் பிறகுதான் போலீஸ்ல புகார் கொடுத்தேன்.
நாகமலை புதுக்கோட்டை போலீஸ் என் மேலேயும் எங்க அப்பா மேலேயும் கொலை முயற்சி வழக்கு பதிவு பண்ணிட்டதாச் சொல்றாங்க. என்னையும் அப்பாவையும் கைது பண்ணச் சொல்லி சில அரசியல் கட்சிகள் பிரஷர் கொடுக்கறதாவும் சொல்றாங்க.
சுதந்திர இந்தியாவில் நான் தலித் என்பதற்காக கஷ்டங்களை அனுபவிக்கிறேன். எப்படியாவது என்னை படிக்க விடக்கூடாது என்பது தான் அந்த மக்களோட எண்ணம். நான் டியூஷன் எடுத்து எங்க காலனியில் இப்பத்தான் அஞ்சு பேர் பத்தாவது படிக்கிறாங்க. நாங்க இன்னமும் செருப்புப் போட்டுக்கிட்டு ஊருக்குள்ள போகக் கூடாது. சைக்கிள் ஓட்டிக்கிட்டு போகக் கூடாது. டீக்கடையில் இரட்டை டம்ளர் இருக்கு. தமிழ்நாட்டில் சாதி என்ற ஆயுதத்தால், தமிழனுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்டால், மற்ற நாடுகளில் மட்டும் தமிழனுக்கு உரிமை வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்?” என்று அழுதுகொண்டே கேட்டார் முருகன். முருகனின் அருகில் இருந்த பாண்டி ரொம்பவே ஆவேசப்பட்டார். “முருகனை அடிச்ச அடுத்த நாள் காலையில் 8.10 மணிக்கு பஸ் வந்தது. அதுலதான் வேலைக்குப் போறவுங்க, பள்ளிக்கூடம் போறவுங்க எல்லாம் போவோம். எங்க மக்கள் எல்லாத்தையும் கீழே இறக்கி விட்டுட்டு மற்ற சாதிக்காரங்க மட்டும் பஸ்ல போனாங்க. நாங்க மூணு கிலோமீட்டர் நடந்து போயி நாகமலை புதுக்கோட்டைக்குச் சென்று பிறகு பஸ் பிடிச்சுப் போனோம்.
எங்க உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்ல. காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் சரியானபடி நடவடிக்கை எடுக்கலைன்னா ஊரை காலி செஞ்சு, முதல்வர் வீடு முன்னாடி எங்களுக்குச் சுதந்திரம் வேணும்னு போராட்டம் நடத்தப் போறோம்” என்றார் பாண்டி படபடப்போடு.
லிட்டில் டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி பர்வதாவர்த்தினி நம்மிடம், “அருந்ததியர் சமூகம் படிக்கக் கூடாது என்பதுதான் வடிவேல்கரை ஊர் மக்களின் நோக்கம். முருகன் படிப்பை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும். அவனும் நம்ம ஊர் வேலைக்காரனாக இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஊர் மந்தை வழியாக சைக்கிளில் சென்ற முருகன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அப்பதான் மற்ற அருந்ததியர் இன மக்களுக்கும் பயம் வரும்னு இப்படிச் செய்யறாங்க. இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இப்படியொரு கொடுமை நடக்குது. அரசாங்கம் என்ன செய்யப் போகிறது. ஆதிக்கச் சாதியினர் ஊர்ல தலைகட்டு வரி போட்டு இந்த கேஸ்ல, அருந்ததியினர் ஜெயிக்கக் கூடாதுன்னு ஒன்றரை லட்ச ரூபாய் வரை பணம் திரட்டியிருக்காங்க.
ஊர் மந்தையில் வைத்து இவ்வளவு பெரிய கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், ‘போலீஸார் அவர்களுக்குள் குடும்பச் சண்டை’ என்று சொல்லுகிறார்கள். ஒரு தனி மனிதனோட அடிப்படை உரிமைகள் அனைத்தும் அந்த ஊரில் முற்றிலும் மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மை” என்கிறார் அந்தச் சமூக சேவகி.
வடிவேல்கரை பஞ்சாயத்துத் தலைவர் ஆறுமுகத்திடம் பேசினோம். “நாங்க யாரையும் சைக்கிள்ல போகக்கூடாது, செருப்புப் போடக் கூடாதுன்னு சொன்னதே கிடையாது. எங்க ஊர் அமைதியான ஊர். நாங்க சாதி வேற்றுமையில்லாம தாயா பிள்ளையாத்தான் ஒற்றுமையா இருக்கோம். முருகன் குடும்பம்தான் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தை வியாபார நோக்கத்தோட பயன்படுத்துறாங்க. எப்பப் பார்த்தாலும் எங்களை மிரட்டுறதுதான் அவங்களுக்குத் தொழில். இதுவரைக்கும் நாலு பி.சி.ஆர். கேஸ் கொடுத்து, முதல் கேஸ்ல நிவாரணம் பணம் வாங்கியிருக்கு அந்தக் குடும்பம். எந்தப் பிரச்னையும் வந்துடக் கூடாதுன்னுதான் கலெக்டர்கிட்டே சொல்லி ‘அமைதி’கமிட்டி போடச் சொல்லியிருக்கேன். தனிப்பட்ட பிரச்னையை சாதிப் பிரச்னையாக மாற்றப் பார்க்கிறார்கள். யாரு தப்பு செஞ்சாலும் தப்பு, தப்புதான். ரெண்டு பேரும் தனிப்பட்ட பிரச்னைக்கு மல்லுக்கட்டி புரண்டிருக்கானுங்க. போலீஸ் நேரடியாக வந்து விசாரணை பண்ணிட்டு போயிருக்காங்க” என விளக்கம் கொடுத்தார் ஆறுமுகம்.
http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=519&rid=26
தமிழன் அழிக்கப்பட வேண்டியவன்தானா……?
தமிழன் என்பவன் யார்? என்றால்
* கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடியின் வழித்தோன்றல்
* உலக மொழிகளிலேயே தற்போது வழக்கில் உள்ள மொழிகளுள் தொன்மையான மொழிக்கு இன்றைய உரிமையாளன்.
* உலகுக்கே பொதுமறைத் தந்த வள்ளுவனுக்கு உறவுக்காரன்.
இப்படி பல பெருமைகளுக்கு உரிமைக்காரன், இதில் இன்றைய நிலையை குறிப்புக்கு சேர்த்து கொள்வோமா என்றால் ..
* பதவி வெறிப்பிடித்த அரசியல் ஓநாய்களுக்கு உறவுக்காரன்.
* தம் உறவையே, சாதியின் பெயரால் தீண்டத்தகாதவனாக்கும் கொடுமைக்காரன்.
* மதத்தின் பெயரால் பிரிந்து கிடக்கும் இளித்தவாயன்.
* நல்லதொரு தலைவனை தேர்ந்தெடுக்க திறமையற்ற/திராணியற்ற கூட்டத்தின் உறுப்பினன்.
* எதிரிக்காக போடும் எலும்புக்காகசேலைக்குள்ளும்/ கோவணத்துக்குள்ளும் ஒழிந்து காவல் கிடக்கும் நாய் போன்றவன்.
* தம் இனம் அழிக்கப்படுகிறதே என்ற கவலையுள்ள அக்கறையோடு வீட்டில் மட்டும் பேசிக்கொள்ளும் பெருங்கூட்டத்தில் ஒருவன்.
* உரிமைக்கு போராடும் இயக்கங்களை கேலி செய்யும் ஈனப்பிறவிகளில் ஒருவன்.
எனப்பெருமைகளை ஆவலோடும் , சிறுமைகளை வருத்தததோடும் பேசிக்கொண்டாலும்,எனது குருதிப்பாசம் தமிழன் அழிவை பார்த்து வருந்தத்தான் செய்கிறது.எனக்கு நாட்டுப்பற்றோ, மொழிப்பற்றோ கிடையாது, மானுடப்பற்று மட்டுமே உண்டு. தமிழின அழிவு அவன் பேசும் மொழியின் பொருட்டுதான் நிகழ்கிறது, இனப்பகையின் வஞ்சகத்தால்தான் நிகழ்கிறது, அவன் பேசும் மொழியும் நான் பேசும் மொழியும் ஒன்று, தமிழை தாய் மொழியாகக் கொண்டு வளர்ந்த என்னை போன்ற மனிதன் நாளும் சாவின் விளிம்பில் போராடிக் கொண்டிருக்கிறான்,என்பதை நினைக்கும் போதுதான் வருத்தம் கோபமாக வழிந்தோடுகிறது. சில நேரங்களில் பதிவுகளாக, சொற்களாக வெளிப்படுகிறது. ஏன்? உன் இனத்திற்காக உயிரை துச்சமென மதித்து களத்தில் இறங்கி போராட வேண்டியதுதானே,என்று கூட சிலர் கேட்கலாம், ஆனால், இங்கு உயிர் விட்டாலும் மானுடபற்று/இனப்பற்று கொழுந்துவிட்டு எரியுமா?
மிகப்பெரும்பான்மையான சாத்தியக்கூறுகள் என் மானுடப்பற்றோடு கூடிய இந்த இனஎழுச்சி வேட்கை என் சிதைத் தீயிலேயே எரிந்து விடும் என்ற அச்சத்தையே ஏற்படுத்துகிறது.
தமிழனின் இக்கால இந்த இக்கட்டான சூழலில் தமிழன் திராணியோடும், தமக்கு இந்த நாட்டில் இழைக்கப்படும் துரோகங்களையும் கண்டு பெருங்கோபத்தோடும் பொங்கியெழாமல் செய்தவன் யார்? என்று கேள்விகள் கேட்டு மற்றவனை கைநீட்டினாலும், தமிழர்களே உங்களை ஒருமுறை சுய ஆய்வு செய்து கொள்ளுங்கள். நீங்கள் தானே அந்த ஒற்றுமை சீர்குலைவுக்கு காரணம்? நாங்கள் எப்படி காரணம் என்று நீங்கள் வியக்க மாட்டீர்கள் என்றே கருதுகிறேன்.
சிங்களன் தமிழனை கொல்லுகிறான் அது இனப்பகை, இனவெறி என்று நாம் வகுத்து அவனை விமர்சித்து எதிர்த்தாலும், தோழர்களே எத்தனை ஆண்டுகளாக அறிவே இல்லாமல் உங்கள் சகோதரர்களை சேரியில் தள்ளி ஒதுக்கி அவர்களை தீண்டத்தகாதவர்களாய் மனிதனிலும் கீழாய் நடத்தினீர்கள். காலம், காலமாக அடிமைப்பட்டவனுக்குதான் விடுதலையின் பெருமைத்தெரியும், அதேரீதியில் அங்கே இலங்கையில் வாழும் தமிழனுக்கு ஆதரவு தெரிவிக்க அவனுக்கு மட்டும்தானே உரிமையுண்டு, உங்களுக்கு (தங்கள் மேல் சாதியாக கருதிக் கொள்பவர்களுக்கு) , காலம் காலமாக அடிமைப்படுத்தியர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது.
இந்த விமர்சனம் நீங்கள் ஏன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்கள்?என்ற தொனியில் எழுந்ததல்ல,
“ நீங்கள் ஏன் முழுமையான மனிதனாக இல்லை. நீங்கள் மனித பண்புகளோடு/ அன்புள்ளத்தோடு இருந்தால், நீங்கள் தமிழனாக இல்லாவிட்டால் கூட மன்னித்துவிடலாம். ஆனால், சக மனிதனின் துயரத்தை கண்டு இரங்கும் மனிதனாக இல்லாமல், சக மனிதனை துனுபுறுத்தும் ஒரு மனித உருவில் திரியும் விலங்காக இருந்தால் மன்னிக்க இயலாது” என்பதை தெரிவிக்கத்தான்.
தன்னோடு வாழும் மனிதனை துன்புறுத்திக் கொண்டே, தொலைவில் வாழும் மனிதனின் துன்பத்திற்காக வாடுவது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவது போல்தானே உள்ளது.
ஒரு எடுத்துக்காட்டு இப்படி வைத்துக் கொள்வோம், அங்குள்ள அனைத்து தமிழர்களையும் தமிழகத்தில் குடியமர்த்தி விடுவோம், நீங்கள் (சாதி பின்னால் திரியும்) அத்தனை பேரும் அவர்களிடம் சாதி பாகுபாடு இல்லாமல் திருமண வைத்துக் கொள்ளத்தயாரா? இந்த கேள்விக்கு பெரும்பான்மையான தன்னை தமிழனாக அடையாளப்படுத்திக் கொள்ளும் பலரிடமும் கள்ள-அமைதியே பதிலாக வரும். இது இன்றைய உண்மை நிலை மிகவும் வருத்தத்தோடு, உரத்து சொல்ல கூடியதுதான். ஆகவே, தமிழர்களே தயவு கூர்ந்து திருந்துங்கள், இன்றில்லையேல் என்று திருந்த போகிறீர்கள்.
இவ்வளவும் விமர்சிக்கும் நான் ஒரு தமிழனாக இருக்கிறேனா? மனிதனாக இருக்கிறேனா?என்றெல்லாம் உங்கள் உள்ளத்தில் கேட்கும் கேள்வி என் காதில் விழத்தான் செய்கிறது. அப்படி ஒரு கேள்வி எழுமானால் அதற்குமுன் உங்களை மனிதர்களாக இந்த சமூகத்தில் நிறுவிவிட்டு உங்கள் கேள்வியை வெளியிடவும். அதற்குமுன் அந்த கேள்வி கேட்க அவசரப்பட்டால், “ அவன் மட்டும் மலம் தின்னலாமா? நான் தின்னக்கூடாதா ” என்ற கேள்வியைப் போல் ஆகிவிடும்.
உனக்கு ஈழத்தமிழன் குறித்த கவலையில்லையா ? என்று கேட்பீர்களானால், கண்டிப்பாக இருக்கிறது, உள்ளம் பதைபதைத்துக் கொண்டு, வருத்தத்தில் துடித்துக் கொண்டு இருக்கிறது,
ஈழத்தமிழனின் சாவின் விளிம்பில் இருக்கிறானே? ஆனால், இங்கு தேர்தல் ஓட்டுகளுக்காக, சாதிக்காக, மதத்திற்காக அடித்து கொண்டு சாகிறார்களே…. என்ற ஆதங்கத்தோடு இவ்வளவையும் கொட்டி தீர்த்திருக்கிறேன்.
தயவு கூர்ந்து உடனடி தன்னாய்வை மேற்கொள்ளுங்கள், இல்லையென்றால் அழிய வேண்டியது ஈழத்தமிழனல்ல, முதலில் பெரும் மக்கள் தொகை கொண்ட தாயகத்தமிழன்தான்.
சாதியின் பின்னால் ஒழித்து வைத்துக் கொண்டு தமிழர்கள் போல் நாடகமாடும் நீங்கள் மனிதத்தின் பொருட்டு உறுதியாக அழிக்கப்பட வேண்டியவர்கள்…………………..
அன்புத்தோழர்களே! உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்
அன்புத்தோழர்களே!
நம் சமூகம் கருத்து பஞ்சத்தால் மதவெறி, சாதிவெறி பாசிசத்துக்கு உள்ளாகும் கொடூர நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. கருத்தை பரவலாக்கும் மாபெரும் சக்தியாக இன்றைய நிலையில் இணையதளம் வாயிலாக கணிணியும், ஊடகமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை பார்ப்பன பரதேசிகளிடமும், அவர்தம் அடிவருடிகளிடமும் உள்ளன.
இந்த ஊடகங்களை நாம் கைப்பற்றாமல் இருப்பது நம்மவர்கள் செய்த மாபெரும் பிழையல்ல, குற்றம். அதை ஓரளவு விழிப்புணர்வு கொண்ட நாமாவது நம் ஆதிக்கம் இந்த ஊடகங்களில் வருமளவு ஆதிக்கம் செலுத்த வேண்டும்.
அறிவியலை முன்னிறுத்தும் நாம் இந்த அறிவியிலால் விளைந்த ஊடகங்களை நம்மைவிட வெகுவாக நம் எதிரிகள் பயன்படுத்துவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? அறிவியலை மறுப்பவர்கள் இந்த ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள்.
நம்மிடமும் ஊடகங்கள் இருக்கின்றன், ஆனால் குறிஞ்சிப்பூ போன்று, இவைகளை மட்டும் வைத்துக் கொண்டு நாம் ஒன்றும் பெரிதாக சாதித்து விட முடியாது. நம் ஊடகங்கள் பரவ வேண்டும்.
பெரியாருடைய காலம் போலல்லாமல் பொதுக்கூட்டமும், உரைவீச்சும் மட்டுமே இன்றைய நிலையில் கருத்து பரவலுக்கு முக்கிய பங்கு வகிக்கலாம் என்று கருதினோமானால், அது நாம் செய்யும் பெரும் பிழையாகிவிடும். பார்ப்பன பண்டார ஊடகங்கள் நீண்ட நாட்களாக நமக்கு எதிரான வேலைகளை செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. நாமோ இன்றும் பொதுக்கூட்டங்களையும், துண்டு பிரசுரங்களை மட்டும் பெரிதாக நம்புகிறோம்.
நாம் செய்ய வேண்டியது
முதலில் ஒரு குழு உருவாக்கி, (அந்த குழு ஒரு கிராமத்திற்கோ, மாவட்டத்திற்கோ, மாநிலத்திற்கோ, நாட்டிற்கோ உட்பட்டதாகவோ இல்லாமல்) மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்து, நாம் வாசிக்கும் செய்திகளை பரப்புவோம்.
அதோடு நில்லாமல்,
ஒவ்வொரு தோழரும் மாதம் ஒருமுறை தாம் அனுப்பிய செய்திகள் எத்தனை தனிநபர்களை சென்றடைந்தது,என்பதை குறித்துக் கொண்டால் நம்முடைய இந்த முயற்சி எந்தளவு வெற்றிகனியை ஈட்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
நாம் பகிர்ந்து கொள்ள வேண்டியவை
1) துண்டு பிரசுரங்களை 2) படக்காட்சிகளாக நம் கருத்துக்கு வலு சேர்ப்பவைகளை 3) குறுந்தகடுகளாக வெளிவரும் ஒளிவீச்சினை 4) மின்னஞ்சல் முகவரிகளை 5) தொடர்பு எண்களை 6) தம் இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களை கண்டிப்பாக ஒளி/ஒலிப்பதிவு செய்து குறுந்தகடுகளை
என முடிந்தளவு என்றில்லாமல், முழு தன்னார்வ முயற்வியோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த பகிர்வு வளமான, சமமான சமூக பகிர்வுக்கு வித்திடும் என நம்புகிறோம், இது விதை, உரமிடுதலும், நீருற்றுதலும், மரமாக வளர்த்தெடுப்பதும் உங்கள் கடமை.
உங்கள் ஆலோசனை ஏதும் இருந்தால்,
தொடர்புக்கு,
மகிழ்நன்.
+919769137032
தாராவி, மும்பை
நம்மை பண்படுத்துவோம்! சமூகம் பண்படவே!!
விழித்தெழு இளைஞர் இயக்கம்.
சட்டக்கல்லூரியில் சாதி வெறிக்கு அடங்கமறுத்து திருப்பி அடித்த மாணவர்கள்
சட்டக்கல்லூரியில் மாணவர்கள் தாக்கப்பட்ட நிகழ்வை சன் நியூஸ் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. அந்த நிகழ்வு எனக்குள் அதிர்வை ஏற்படுத்தி இருந்தாலும், இதற்கு என்ன காரணமாக இருக்கும் அலுவலகத்திற்கு சென்றவுடன் செய்திகளை பார்த்து எதனால் இந்த வன்முறை தூண்டப்பட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும்,என்ற ஆவலோடு ரயிலில் சென்று அமர்ந்தேன், என் எதிரில் ஒரு தமிழன்பர் தினகரன் நாளிதழை புரட்டிக்கொண்டிருந்தார், அதில் நான் சன் நியூஸ் தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்வு நிழற்படமாக வந்திருந்தது, அவரிடம் செய்தித்தாளை கேட்டு பெற்று அந்நாளிதழில் வந்திருந்த செய்தியை வாசித்தேன், அப்பொழுது மெலிதாக காரணம் பிடிப்பட்டது, இருந்தும் குழப்பம் நீடித்தது. அலுவலகத்திற்கு சென்று செய்திகளை உலா வந்தேன், குழப்பம்……….அடித்தது யார்?…….அடி வாங்கியது?……….ஏன் அடித்தார்கள்? இந்த வன்முறைக்கு தூண்டுதலாக இருந்த காரணம் என்ன?………..எந்த செய்தித்தாளும், செய்தி தொலைக்காட்சியும் வெளியிட்டனவா?……………..என்பது மிகப்பெரிய ஐயம்.
(பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிடுவதே இந்தியாவிலேயே அதிகமான வாசகர் வட்டம் கொண்ட நாளேடு எமது, அதிகமான பார்வையாளர்களை கொண்டது எம் தொலைக்காட்சி நிறுவனம் என்று விளம்பரம் தேடுவதற்குதானேயன்றி உண்மையான சமூக அக்கறையோடு அல்ல என்பது என் திண்ணமான எண்ணம், அது பெருமளவு உண்மையும் கூட)
அதற்கு பிறகு இணையத்தில் தொடர்ச்சியாக உலா வந்தும், செய்தித்தாள்களை வாசித்தும், தொலைக்காட்சி செய்திகளை பார்த்தும் உணர்ந்த செய்தியின் வெளிப்பாடுதான் இந்த கட்டுரை
“தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றதாம், அதற்கு தங்களை தேவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் சுவரொட்டியோ(விளம்பரமோ) அச்சிட்டிருக்கின்றனர், அதில் சட்டமேதை அம்பேதகரின் பெயரை லாவகமாக தவிர்த்திருக்கின்றன்ர், அவர்கள் ஏன் அம்பேத்கரின் பெயரை பயன்படுத்த வேண்டும்? என்ற கேள்வி எழலாம், அம்பேத்கரை தலைவராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி யாரையும் நாம் கட்டாயப்படுத்த தேவையில்லைதான், ஆனால், விழா நடத்தியது (அம்பேத்கர்) சட்டக் கல்லூரி மாணவர்களாயிற்றே, அங்கு தவிர்த்ததுதான் தவறு, பல நூற்றாண்டுகளாக சேரிகளில் சாதியின் பெயரால், தீண்டாமை கொடுமையால் முடங்கி அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனம் இன்று படித்து முன்னேறியிருந்தாலும் இன்று இந்த நவீன சேரிக்குள் ஆதிக்க சாதி திமிர் பிடித்த சாக்கடை கண்ணோட்டத்தை, சாதித் திமிரையும் இன்றும் சந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது.
தன்னை ஈனப்பிறவியாக பார்க்கும் இந்த சமூகத்தால் தன் தலைவன், மாமேதை, உலக அறிவாளிகளில் ஒருவர், சட்ட மேதை, பாரத ரத்னா என பல புகழ் பெயர் சூட்டப்பட்டும் இன்றளவும் கீழ்ச்சாதியில் பிறந்தவனாக கீழ்ச்சாதியாக பாவிக்க படுகிறானே, இழிவுபடுத்த படுகிறானே என்ற சினம் வரத்தானே செய்யும். அதுதானே நியாமும்கூட. சுயமரியாதை உணர்வு வந்த பிறகு சாதி ஆதிக்கத்திற்கு அடங்க மறுக்கத்தானே செய்யும் அவன் உணர்வுகள், திருப்பி அடிக்கத்தானே தூண்டும்.
அடிப்படையில், கல்லூரி வளாகத்தில் தேவர் ஜெயந்தி கொண்டாட அனுமதியளித்தது தவறு, அதற்காகத்தான் கல்லூரி முதல்வர் மீது முதல் வழக்கு பதியப்படிருக்க வேண்டும், (ஆனால் இந்த ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள் இதை செய்ய மாட்டார்கள் என்பது திண்ணம்) முத்துராமலிங்கம் ஒன்றும் பொதுவான தலைவரில்லை (யாருக்காவது அவர் தலைவராக இருக்க தகுதியுடையவரா? என்பது இன்னொரு கேள்வி, அவருடைய தகுதியை ஓரளவாவது தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்), இன்றைய நிலையில் ஆதிக்க சாதி திமிரின் அடையாளம்தான் முத்துராமலிங்கம். அந்த சாதி வெறியனின் அடையாளத்தை முன்னிறுத்தி சட்ட மேதை அம்பேத்கரை அவமானப்படுத்தியதை அந்த மாணவர்கள் அல்ல, அரசு தட்டிக் கேட்டிருக்க வேண்டும்,
அரசு தட்டி கேட்க வில்லை! மாணவர்கள் தட்டி கேட்டார்கள்!!!
இதில் அவர்களை கைது செய்வதற்கு பதிலாக இன்றாவது சுயமரியாதை உணர்வு எழுந்ததே, இன்னும் வீரியத்தோடு போராடு , சாதி ஒழியும் வரை போராடு என்று தட்டியல்லவா கொடுத்திருக்க வேண்டும் இது சாதி ஒழிப்பு அரசாக இருந்திருந்தால்…………………………….
இவ்வளவு சினம் கொண்டு தாக்கும்படிக்கு தூண்டிய அந்த சாதி ஆதிக்க உணர்வுகளைதான் முதலில் அரசு தட்டி கேட்க வேண்டும், பிறகுதான் அம்மாணவர்களை நோக்கி சட்டம் பாய வேண்டும்,
இல்லையென்றால், சட்டம் எழுதியரை இழிவுபடுத்திய மாணவர்களை தட்டி கேட்டதற்காக மாணவர்கள் கைது என்றுதான் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட வேண்டும், அதுதான் பொருத்தமாகவும் இருக்கும்.
பக்கம் பக்கமாக செய்திகளை வெளியிட்டு, நாளும் நடந்த நிகழ்வை காட்சியாக காண்பித்து பணம் சம்பாதிக்கும் ஊடகங்கள் முதலில்
1) சமூக அக்கறை பெறட்டும் சொல்லட்டும்,
2) சாதி சிக்கல்களை வெளிப்படையாக அலசட்டும் பிறகு
பிறகு சொல்லட்டும் இது காட்டு மிராண்டித்தனமா? அல்லது மனிதத்தன்மையா? என்று.
## ஈழத்தமிழனுக்கு குரல் கொடுக்கும் போலித்தமிழனே நம் அருகில் வாழும் நம் சகோதரனை சேரியில் ஒடுக்குவதை முதலில் நிறுத்து!
## ஈழத்தமிழனுக்கு தமிழனாய் குரல் கொடுக்க சாதியின் கழுத்தறுத்து மனிதனாய் வா இன்னொருமுறை கருத்தறித்து!
வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களை விட பி.ஏ., எம்.ஏ., சாஸ்திரி, வித்வான் முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களல்ல! – பெரியார்
குடிஅரசு 1927, போளூர் ஆரம்பாசிரியர் மகாநாடு
அக்கிராசனப் பிரசங்கம்சகோதரிகளே! சகோதரர்களே!இன்று நீங்கள் எனக்குச் செய்த வரவேற்பு, ஆடம்பரம், உபசாரம், வரவேற்புப்பத்திரம் முதலியவைகளைக் கண்டு எனது மனம் மிகவும் வெட்கப்படுகிறது. இவ்வித ஆடம்பரங்களுக்கு நான் எந்த விதத்தில் தகுந்தவனென்பது எனக்கே தெரியவில்லை. கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் என்று சொல்லப்பட்ட பெருத்த கல்விமான்களாகிய உங்களது மகாநாட்டுக்கு அக்கல்வியை ஒரு சிறிதும் பயிலாத நான் எவ்விதத்தில் தகுதியுடையவனாவேன். உங்களின் அன்பான வேண்டுகோளை மறுக்கப் போதிய தைரியமில்லாத காரணத்தாலேயே ஒருவாறு இப்பதவியை ஏற்க வேண்டியவனாயிருக்கிறேன்.
என்னுடைய வாழ்நாளில் சுமார் 2 வருஷகாலந்தான் நான் பள்ளியில் படித்திருப்பேன். அவ்விரண்டு வருஷமாகிய எனது 8 வயதுக்கு மேல்பட்டு 11 வயதுக்குள்பட்ட காலத்தில் நான் பாடம் படித்த காலத்தை விட உபாத்தியாயரிடம் அடிபட்ட காலந்தான் அதிகமாயிருக்கும். இதையறிந்த என் பெற்றோர்கள் இவன் படிப்புக்கு லாயக்கில்லை என்பதாகக் கருதித் தாங்கள் செய்து வந்த தொழிலாகிய வர்த்தகத்தில் என்னுடைய 11வது வயதிலேயே ஈடுபடுத்தி விட்டார்கள். இந்த 2 வருஷ கெடுவிலேயும் என் கையெழுத்துப் போடத்தான் கற்றுக் கொண்டேன் என்று சொல்லலாம். ஆகவே கல்வி முறையிலும் உங்கள் குறைகளைப் பற்றியும் நான் உங்களுக்கு எந்த விஷயத்தையும் சொல்லக்கூடிய சக்தி என்னிடத்தில் இல்லை. ஏதோ என் புத்தி அனுபவத்திற்கெட்டிய வரையில் சில வார்த்தைகளைச் சொல்ல வருகிறேன்.தற்கால ஆசிரியர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு புனிதமான கடமையென்பதாகக் கருதிப் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தாலும் அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சரியானபடி உணர்ந்து நடப்பதிற்கில்லாத நிலையில் இருந்துகொண்டு அத்தொழிலை தங்கள் வயிற்றுப்பாட்டிற்கு நடத்தி வருவதே வழக்கமாயிருக்கிறது. ஆசிரியர்கள் இம்மாதிரி மகாநாடுகள் கூடிப்பேசுவதும், தீர்மானப்பதும் தங்களுக்கு சில சவுகரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும் தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல் தங்களால் மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளவோ, தேசம் முன்னேற்றத்திற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்தியையடையவோ ஒரு பிரயத்தனமும் செய்ததாக நான் அறியவே இல்லை.
முதலாவது நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு ஆதாரமாகக் கருதிக் கற்கவும் கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல் மக்கள் அறிவுத் தத்துவத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாயிருக்கிறதென்பது நீங்கள் அறிந்த விஷயம் தான். ஆரம்பக்கல்வி முதல் உயர்தரக்கல்வி, சகலகலா கல்வி என்பது வரையிலும் கவனித்தால் தற்காலம் அடிமைத் தன்மையையும் சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடுமையான ஆட்சிமுறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவி செய்து வயிறு வளர்க்கும் தேசத்துரோகிகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாகத் தானே இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது?சாதாரணமாக ஆரம்பாசிரியர்கள் என்கிற பெயரையோ யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால் முதலில் நமது பெண்மக்களுக்குத் தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்பாசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களே ஆவார்கள்.
அக்குழந்தைகளுக்கு 6,7 வயது வரையிலும் தாய்மார்களே தான் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள். மேல்நாட்டுப் பழக்க வழக்கங்களிலும் இவைதான் காணப்படுகிறது. எனவே,இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். நீங்களிருவரும் எப்படிப் பிள்ளைகளைப் படிப்பிக்கின்றீர்களோ அப்படியே அவர்கள் தேசத்திற்கும் தேச நன்மைக்கும், ஒழுக்கத்திற்கும் உரிய மக்களாய் வாழக்கூடும். எனவே தேசம் மக்களாலும் மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் அப்பேர்ப்பட்ட ஆரம்பாசிரியர் களாகிய பெண்களோ நமது நாட்டில் பிள்ளைபெறும் இயந்திரங்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும். ஆகவே, அந்த முதலாவது ஆரம்பாசிரியர்களின் யோக்கியதை இப்படியாய் விட்டது.
அடுத்தாற்போலுள்ள இரண்டாவது ஆரம்பாசிரியர்களாகிய உங்கள் யோக்கியதையோ, உங்கள் வயிற்றுப்பாட்டுக்கே கான்பரன்° கூட்டவேண்டியதாகப் போய்விட்டது. உங்கள் இருவர்களாலும் கற்பிக்கப்படப்போகிற பிள்ளைகள் எப்படித்தக்க யோக்கியதை அடைய முடியும். கல்வி என்பது வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமல்ல. அது அறிவுக்காகவும் ஏற்பட்டது என்பதாக நாம் எடுத்துக் கொண்டால மக்கள் சுயமரியாதையோடும் சுதந்திரத்தோடும், மற்ற மக்களுக்கு இன்னல் விளைவிக்காமலும், அன்பு, பரோபகாரம் முதலியவைகளோடு கண்ணியமாய் உலக வாழ்க்கையை நடத்தத் தகுந்த ஞானமும் உண்டாகத் தகுந்ததாக இருக்க வேண்டும்.
இவைகளை அறிந்தே வள்ளுவரும் “உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும், கல்லாதார் அறிவில்லாதார் “என்றும்”, “தாம் இன்புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்” என்றும், “ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்” என்றும் சொல்லி இருக்கிறார். இதற்கேற்ற கல்விக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள். நாய்க்கு நாலுகால், பூனைக்கு வாலுண்டு கண்ணில்லாதவன் குருடன், திருடாதே, அடிக்காதே என்று சொல்லிக் கொடுப்பதனால் என்ன பலன் ஏற்பட்டுவிடக்கூடும். இவைகள் எல்லாம் குழந்தைகள் தானாகவே படித்துக் கொள்ளும். ஒருவனை அடித்தால் அவன் திரும்பி அடித்துவிடுவான். ஒருவனை வைதால் அவன் திரும்பி வைதுவிடுவான். திருடினால் பிடித்து நன்றாக உதைத்து விடுவார்கள் என்பதும் நாயும் பூனையும் கண்ணில் படும்போதே கால எவ்வளவென்பதும் வாலுண்டென்பதும் தெரிந்து கொள்வான். இதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டமும், பணச்செலவும் மெனக்கேடும் வேண்டியதில்லை என்பதே நமது அபிப்ராயம்.
நீங்கள் முதலில் மக்களுக்கு சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மானம், ஆண்மை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். மக்களிடத்தில் அன்பு இருக்கக் கற்று கொடுக்க வேண்டும். தேசாபிமானத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதா? என்பதை உங்கள் மனதையே கையை வைத்துக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் மாத்திரமல்ல. உங்களைவிடப் பெரிய சகலகலாவல்லபர்களிடத்தில் ஏம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்களை பெற்ற பையன்களும், ஒரு காபிக்கடைக்குப் போனால் தனது சுயமரியாதையற்று அங்கு எச்சில் கிண்ணம் தூக்குபவனைக் கண்டு “சாமி ஒரு கப் காப்பி கொண்டு வா என்று கூப்பிடுகிறான். தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக் கொடுத்து அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான். தன் தேசத்தையும் மக்களையும் காட்டிக்கொடுத்து வயிறு வளர்ப்பதில் போட்டி போடுகிறான்.
இந்த பட்டம் எல்லாம் கல்வியாகுமா? இதை பெற்றவர்கள் எல்லாம் படித்தவர்களாவார்களா? வண்ணான், அம்பட்டன், தச்சன், கொல்லன், சக்கிலி முதலியோர் எப்படித் தங்கள் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்கிறார்களோ அப்படியே தற்காலம் பி.ஏ., எம்.ஏ., என்ற படித்தவர்கள் என்போர்களும் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள். வண்ணானுக்கு எப்படி சரித்திரப் பாடம் தெரியாதோ அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்குந் தொழில் தெரியாது. அம்பட்டனுக்கு எப்படி பூகோளம் தெரியாதோ அப்படியே எம்.ஏ. படித்தவனுக்கு பிறருக்கு க்ஷவரம் செய்யத் தெரியாது. சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும், வேத வியாக்கினங்களும் தெரியாதோ அப்படியே வித்வான்களுக்கும், சா°திரிகளுக்கும் செருப்புத் தைக்கத் தெரியாது. ஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களை விட பி.ஏ., எம்.ஏ., சா°திரி, வித்வான் முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர். அறிவாளிகளுமல்லர், உலகத்திற்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில் தானே தவிர அறிவாகாது.
இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள்களாகவும், சுயநலக்காரர்ககளாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம். இவ்வளவும் படியாதவர்கள் பரோபகாரியாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதையுள்ளவர்களாகவும் இருக்கலாம.
எனவே இதுகளல்ல கல்வியென்பது நமக்கு விளங்கவில்லையா? நமது நாட்டின் கேட்டிற்கும், நிலைமைக்கும் முதல் காரணம் தற்காலக் கல்விமுறையென்பதே எனது அபிப்ராயம். முற்காலத்தில் பனை ஓலையில் எழுதித் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து படித்த படிப்பை விட தற்காலப் படிப்பு மக்களுக்கு என்ன நன்மை செய்துவிட்டது? ஓலைச் சுவடியும், எழுத்தாணியும், ஆற்று மணலும் போய்க் காகிதக் குப்பைகளுக்கும் பெரும் பெரும் புத்தகங்களுக்கும், இங்கிப் பெட்டி, பேனா, பென்சில்களுக்குமாக நமது பணங்கள் சீமைக்குப் போக ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல் வேறு பலனுண்டா? படிப்பில்லாத என்கிற முற்காலத்து மக்களை விட படிப்புள்ள என்கிற தற்காலத்து மக்கள் ஒழுக்கத்தில் எவ்விதத்தில் உயர்ந்திருக்கிறார்கள்? படிப்பில்லாத காலத்தைவிட அன்பில், அன்னியோன்யத்தில் நம்பிக்கையில், படிப்புள்ள மக்கள் என்ன ஒத்திருக்கிறார்கள்?
முன் காலத்தில் ஒருவன் வாங்கின கடனைக் கொடுக்காவிட்டால் அவன் வீட்டுவாயிலில் ஒரு பசுவையும் அதன் கன்றையும் தீனி போடாமல் கட்டிவிடுவது வழக்கம். இந்தப் பட்டினியின் பாவத்திற்கஞ்சி பெண் ஜாதியின் தாலியை விற்றாவது கடனைக் கொடுத்துவிட்டுத் தான் வீதிப்புரம் நடப்பான் என்று என் தகப்பனார் சொல்லியிருக்கிறார். கல்வி ஏற்பட்ட காலமாகிய இப்பொழுது அம்மாதிரி செய்தால் படித்தவர்கள் என்கிற வக்கீல்கள் பாலைக் கறந்து நமக்குக் கொண்டுவந்து கொடுத்துவிடு பாவம் வந்து உன்னை என்ன செய்து விடும் பார்க்கலாம் என்று சொல்லி ஏமாற்றி வழிகாட்டி வருவார்கள். இதனாலேயே தற்காலம் எத்தனை மேஜி°ட்ரேட் கச்சேரி, எத்தனை முன்சீப் கோர்ட்டு, எத்தனை செஷன் ஹைகோர்ட், எத்தனை போலீ° கச்சேரி ஏற்பட்டிருக்கிறது பாருங்கள். இவைகளெல்லாம் படிப்பில்லாத என்கிற முற்காலத்தில் இருந்தனவா?
படிப்பு என்னும் தற்காலக் கல்வி முறையல்லவா மக்களை இவ்வளவு ஒழுக்க ஹீனமாக நடக்கத் தூண்டி அல்லல் படுத்தி நாட்டையும், சமூகத்தையும் பாழ்படுத்தி வருகிறது.
நாய் வாழ்க்கை வாழ்க்கையும் தமிழர்களும்.
பணக்கார, நடுத்தர,ஏழை என எல்லோர் வீட்டிலும் நாயை வளர்க்கும் பட்சத்தில், நாய் மீது அன்பை பொழிவர், கொஞ்சம் நாய் மீது அன்பு கூடிவிட்டாலோ தாங்கள் சாப்பிடும் தட்டிலேகூட உணவு வழங்க தயங்க மாட்டார்கள் நம் மனிதர்கள்(இதில் தமிழர்களும் அடங்குவர்கள்தானே!), இவ்வளவு ஏன் தங்கள் படுக்கையிலே கூட உறங்க கூட நாயை அனுமதித்து விடுவர். ஆனால், நாய்க்கு பெண் வழங்கமாட்டார்கள், வழங்க முடியாது ஏனென்றால் அது இயற்கைக்கு முரணானது. நாய் மனித இனமல்ல.
இதையே சாதிக்குள் திருமணம் செய்து கொள்ளும், சாதிக்குள் மட்டும்தான் பெண் எடுப்பேன்/கொடுப்பேன் என்ற கொள்கை கொண்ட (ஈன)மனித தமிழர்கள் இன்னொரு சாதிக்காரனை நாயைவிட உயர்வாக என்ன நடத்திவிடுகிறான்?
இன்றைய தொலை-தொடர்பு/தொழில்நுட்ப உலகத்தில் தொடர்பு பெருகி விட்ட காரணத்தினாலும், நாகரீகம் என்ற போர்வையில் பேச வேண்டியிருக்கிறதே என்ற எண்ணத்திலும் வேற்று சாதி மனிதனோடு தொடர்பு ஏற்படும், நட்பு உருவாகும், வீட்டிற்கு அழைத்து செல்ல நேரிடும், உணவளிக்க நேரிடும், ஆனால், பெண் கொடுக்க மாட்டான், உறவு ஏற்படுத்தி கொள்ள மாட்டான், ஏனென்றால் அவன் வேறு சாதியாம்!
ஒரு சாதிக்காரன் இன்னோர் சாதிக்காரனை நாய் போல நடத்துகிறான், மற்றொருவன் இவனை நாய் போல எண்ணுகிறான். இதுதானே சங்கம் வைத்து சாதி வளர்க்கும் தமிழனின் நிலை.
இது நாய் பிழைப்பு அல்லாமல் வேறென்ன?
-
Archives
- October 2009 (1)
- September 2009 (11)
- August 2009 (4)
- July 2009 (2)
- June 2009 (1)
- May 2009 (1)
- April 2009 (3)
- March 2009 (10)
- February 2009 (1)
- January 2009 (7)
- December 2008 (3)
- November 2008 (20)
-
Categories
- அ மார்க்ஸ்
- அண்ணா
- அப்பா
- அமீர்
- அம்பேத்கர்
- அல்லா
- இந்தியா
- இந்து மதம்
- இனப்படுகொலை
- இனவெறி
- இலங்கை
- இழிவு
- இஸ்லாம்
- ஈழம்
- உலகத்தமிழ்
- எண்ணம்
- எம்.ஜி.ஆர்
- கடவுள்
- கடவுள் கற்பனை
- கம்யூனிசம்
- கருணாநிதி
- கர்த்தர்
- கலைஞர்
- கவிஞர்
- கவிதை
- காங்கிரஸ்
- காசுமீர்
- காதல்
- கிருத்துவம்
- கீற்று
- குடியரசு
- குண்டு வெடிப்பு
- சட்டக்கல்லூரி
- சாதி
- சிரிப்பு
- சீமான்
- சு சாமி
- சே
- ஜெயலலிதா
- டக்ளஸ் தேவானந்தா
- தமிழ்
- திருமணம்
- திருமா
- தீபாவளி
- தீவிரவாதம்
- நகைச்சுவை
- நையாண்டி
- பக்தி
- பன்றி காய்ச்சல்
- பாடல்
- பாரதிதாசன்
- பார்ப்பானியம்
- பிரபாகரன்
- புதிய ஜனநாயகம்
- புலிகள்
- பெரியார்
- போர் நிறுத்தம்
- மகிழ்நன்
- மத(ல)ம்
- மதம்
- மனிதம்
- மரணம்
- மாநாடு
- மாவீரர்கள்
- மிரட்டல்
- மூடநம்பிக்கை
- மொழி
- ரஜினி
- ரா(RAW)
- ராஜபக்சே
- ராஜிவ்
- ராமேஸ்வரம்
- லொள்ளு சபா
- விடுதலை
- விழித்தெழு
- Periyar
- Uncategorized
-
RSS
Entries RSS
Comments RSS